துல்லியம் என்பது வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு இன்றியமையாத
தேவை என்றாகிவிட்ட இன்றைய நிலையில், முன்பு மக்கள் வாழ்ந்தது போல ஒரு
'பொத்தாம் பொதுவான' வாழ்க்கையை யாரும் வாழமுடியாது. வாழ்க்கையின் ஒவ்வொரு
நிகழ்வும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் பொழுது, அவை ஒவ்வொன்றிற்கும்
சரியான சான்றுகள் தேவைப்படுகின்றன. சான்றளிப்பதில், சான்றளிப்பவர்
யாராகவேனும் இருக்கலாம். ஆனால், சான்றளிப்பதும், அதற்காக விண்ணப்பிப்பதும்
ஒவ்வொரு தனி மனிதனின் முதன்மைத் தேவைகளில் ஒன்றாகிவிட்டது. இப்படிச்
சான்றளிப்பதில் பெரும்பாலும், பெரும்பாலான உரிமைகளை அரசுகள் தன்னகத்தே
கொண்டுள்ளன. பிறப்புச் சான்று முதல் இறப்புச் சான்று வரை வாழ்க்கையின் பல
நிலைகளில் பல சான்றுகள் நமக்குத் தேவைப்பட்டாலும், அவற்றைப் பெறுவதில் உள்ள
நடைமுறைகள் பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை என்பதால் பல இன்னல்கள்
ஏற்படுகின்றன. எனவே, பொது மக்களுக்குத் தேவையான பொழுது தேவையான தகவல்களைக்
கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்நூல் உருவாக்கப்படுகின்றது.
பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு மற்றும் சான்றிதழ் பெறுதல்
- Registering the Birth and Death and obtaining the birth certificate or death certificate
இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் இந்தியப்பெற்றோர்களுக்கு நிகழும்
ஒவ்வொரு பிறப்பிற்கும், அல்லது நிகழும் ஒவ்வொரு இறப்பிற்கும் பதிவு செய்தல்
என்பது சட்டப்படி(Registration of Births and Deaths Act, 1969)
கட்டாயமாகிறது. எனவே பிறப்பு மற்றும் இறப்பை முறையாகப் பதிவு செய்தல்
அனைவரது கடமையாகும். இது திட்டமிடல் உள்ளிட்ட பல பணிகளுக்கு அரசிற்கு
உதவிகரமாக இருக்கும். எனவே அனைவரும் பிறப்பு மற்றும் இறப்பைக் கட்டாயமாகப்
பதிவு செய்யவேண்டும்.முன்பெல்லாம் குழந்தை பிறத்தல் என்பது வழக்கமாக
வீடுகளிலேயே நிகழும் ஒரு நிகழ்வு என்பதால், மருத்துவச் சான்றிதழ்கள்
எவையும் இல்லையென்பதால், உள்ளூரிலேயே உள்ள 'மணியகாரர், 'தண்டல்'காரர்கள்'
(சிற்றூர் -கிராம- உதவியாளர்கள்) உள்ளிட்டவர்களே பிறப்பைப் பதிவு செய்வதில்
அனைத்து வேலைகளையும் செய்துவிடுவார். ஆனால், தற்காலங்களில் வீட்டிலேயே
குழந்தை பிறந்தாலும், அப்பிறப்பைப் பதிவு செய்வது பெற்றோரின் முழு முதல்
கடமையாகும். மருத்துவமனையில் பிறந்தால், மருத்துவமனை நிருவாகமே பிறப்பைப்
பதிவு செய்து கொடுக்கும். சிற்றூர்களில் அல்லது பேரூராட்சிகளில் ஒரு
குழந்தை பிறந்தால், அப்பிறப்பு சிற்றூர் (கிராம) நிருவாக அலுவலரிடம்
முறையாக ஒரு மனுக் கொடுப்பதன் மூலம், அல்லது தகவல் தெரிவிப்பதன் மூலம்
பதிவு செய்யப்படலாம். நகரங்கள் அல்லது மாநகரங்களில் குழந்தை பிறந்தால் அது
சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலரிடம், அல்லது மாநகராட்சி 'வார்டு'
அலுவலகத்தில் பதிவு செய்யப்படவேண்டும். இறப்பையும் இவ்வாறே பதிவு செய்ய
வேண்டும். இதில் 'கிராம' நிருவாக அலுவலரிடம் பதிவு செய்யப்படும் தகவல்கள்
வட்டாட்சியர் அலுவலகம் சென்று, இரண்டு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள் அந்தப்
பகுதிக்குச் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
எனவே பிறப்பு அல்லது இறப்பிற்குப் பின்னர் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட
ஆண்டுகள் ஆகிவிட்டால் பிறப்புச் சான்றிதழ் அல்லது இறப்புச் சான்றிதழைச்
சம்பந்தப்பட்ட பகுதியின் சார் பதிவாளர் அலுவலகத்தில் தான் பெற முடியும்.
நகரம் அல்லது மாநகரம் என்றால், நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகத்தில்
பெற்றுக்கொள்ளலாம். இதற்கு கட்டணமும் உண்டு.
குழந்தையின் பிறப்புப் பதிவு செய்யப்பட்டாலும் அக்குழந்தையின் பெயரும்
பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யப்படவேண்டும்.இன்றைய சூழலில் பெரும்பாலான
அல்லது அனைத்துக் குழந்தைகளுமே மருத்துவமனைகளில் பிறக்கின்றன. இதில்,
அரசுப் பொது மருத்துவமனைகளில் அதிக அளவில் ஏழை மக்களே மருத்துவம்
பார்க்கின்றனர். அவர்களுக்குப் போதிய வழிகாட்டுதல்கள் இல்லாததால்,
மருத்துவமனை நிருவாகமே அவர்களுக்குப் பிறக்கும் குழைந்தைகளின் பிறப்பைப்
பதிவு செய்து கொடுத்த பின், அவர்கள், அடுத்த சில நாள்களில் அல்லது
மாதங்களில் தங்கள் குழந்தைகளுக்கு இடும் பெயர்களைப் பிறப்புச்
சான்றிதழ்களில் பதிவுசெய்யத் தவறிவிடுகின்றனர். இருப்பினும் பிறப்புச்
சான்றிதழை வாங்கி வைத்துக்கொண்டு, 'தங்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
வேலை முடிந்துவிட்டதாக' தவறாக நினைத்துக் கொள்கின்றனர்.
பிற்காலத்தில் ஒரு நாள் பள்ளியில் சேர்க்கும் பொழுதோ அல்லது வேறு ஏதாவது
ஒரு காரணத்திற்காகவோ பிறப்புச் சான்றிதழின் தேவை ஏற்படும்பொழுது அதைப்
பார்க்கும் ஒரு அலுவலரால் தான் இந்த உண்மையையே அவர்கள் உணருகின்றனர். அந்த
நேரத்தில் உடனடியாக ஓரிரு நாள்களில் பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு
செய்வது அவ்வளவு ஒன்றும் எளிதானதல்ல. குழந்தை பிறந்து இரண்டு மூன்று
ஆண்டுகள் என்றால், பெற்றோர் எழுதிக்கொடுக்கும் பெயரை எளிதாகப் பதிவு செய்து
விடலாம். அதுவே, பத்து ஆண்டுகள் என்றால், அக்குழந்தைக்குப் பள்ளியில் என்ன
பெயர் வழங்கப்படுகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு இடம் ஏற்பட்டு விடும்.
எனவே, பள்ளிச் சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களைப் 'பரிசீலித்த' பின்னரே
குழந்தையின் பெயர் பதிவு செய்து கொடுக்கப்படும். எனவே, குழந்தைக்குப் பெயர்
இட்டவுடன் அதைப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்து கொள்வது மிகவும்
எளிது.
குழந்தைக்குப் பெயரிட்டவுடன் பெயரைப் பதிவுசெய்யத் தவறியவர்கள்,
பின்னாளில் அதாவது ஒரு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால்,
அக்குழந்தை நகரம் அல்லது மாநகரப் பகுதிகளில் பிறந்திருந்தால்,
சம்பந்தப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் உரிய கட்டணம்
செலுத்திப் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். பொதுவாக மாநகராட்சி மற்றும்
நகராட்சிகளில் குழந்தை பிறந்து அதன் பெயர் பதிவு செய்யப்படத்
தவறிவிட்டிருந்தாலும், அதற்குப் பின்பு பல ஆண்டுகள் கழித்தும்
அக்குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய, அந்தக் குழந்தையின் பெற்றோரின்
தற்போதைய முகவரிச் சான்று (உம்.- குடும்ப அட்டை), குழந்தையின் பெயருக்கான
பள்ளிச் சான்று அல்லது பெற்றோரின் 'நோட்டரி' வாயிலாகத் தயாரிக்கப்பட்ட
உறுதிச் சான்றுடன் விண்ணப்பித்தால் சில நாள்களில் பிறப்புச் சான்றிதழ்
வழங்கப்படும். ஆனால், சிற்றூர்ப்புறங்களில் குழந்தை பிறந்திருந்தால்,
குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்யும் பதிவு அலுவலராக அந்தச் சிற்றூர்
(கிராம) நிருவாக அலுவலரே பணியாற்றுவதால், அவர்தான் பதிவு செய்திருப்பார்.
ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பின்னால் அது வட்டாட்சியரின் நேரடிப்
பணியில் வந்துவிடும். எனவே, குழந்தை ஒரு சிற்றூரில் பிறந்து பெயர்
பதிவுசெய்யத் தவறிவிட்டிருந்தால், அதற்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து
அக்குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய வட்டாட்சியருக்கே விண்ணப்பிக்க
வேண்டும். ஆனால், வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும் பிறப்புப் பதிவேடு
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தந்தப் பகுதி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு
அனுப்பப்பட்டுவிடும். அப்படியே அனுப்பப்பட்டாலும், அப்பதிவேட்டை
நிருவகிக்கும் பொறுப்பு சார்பதிவாளருக்கு இருக்கிறதே தவிர, அப்பதிவேட்டில்
பதிவு செய்வதற்கோ அல்லது திருத்தங்கள் மேற்கொள்வதற்கோ அவருக்கு அதிகாரம்
இல்லை. எனவே இது போன்ற தருணங்களில், வட்டாட்சியர் சார் பதிவாளர்
அலுவலகத்திலிருந்து குறிப்பிட்ட பிறப்பு மற்றும் இறப்புப் பதிவேட்டை
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து, அதில் பெயரைப் பதிவு செய்து, அதன்
பின்னர் அப்பதிவேட்டைத் திரும்ப அந்தச் சார் பதிவாளர் அலுவலகத்திற்கே
அனுப்புவார். அங்கு மீண்டும் ஒரு விண்ணப்பத்தைப் புதிதாக அளித்துப் பெயர்ப்
பதிவுடன் கூடிய ஒரு புதிய பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். இச்
சான்றிதழ் எத்தனை நகல்களில் வேண்டுமானாலும் கிடைக்கும். அதற்காக உரிய
கட்டணங்கள் கட்ட வேண்டியிருக்கும். இதற்காக, ஒரு தனி வெள்ளைத் தாளில் ஒரு
வேண்டுகோளை எழுதி விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில் இரண்டு
ரூபாய்க்கான நீதிமன்ற வில்லையை ஒட்டி, அதனுடன் அதற்கான சான்றுகளாக
மனுதாரரின் குடும்ப அட்டை அல்லது ஏதாவது முகவரிச் சான்று, குழந்தையின்
பெயருடன் கூடிய பள்ளிச் சான்று போன்றவற்றை இணைத்து விண்ணப்பித்தால்
வட்டாட்சியர் அவ்வின்னப்பத்தின் மீது உரிய விசாரணை செய்து, விண்ணப்பத்தில்
கண்டுள்ள வேண்டுகோள் உண்மையென முடிவு செய்யும் வேலையில், குறிப்பிட்ட சார்
பதிவாளர் அலுவலகத்தில் உள்ள பிறப்புப் பதிவேட்டை வட்டாட்சியர்
அலுவலகத்திற்கே வரவழைத்துப் பெயர் பதிவு செய்து மீண்டும் அப்பதிவேட்டை
அந்தச் சார்பதிவாளர் அலுவலகத்திற்கே அனுப்பிவைப்பார்.
ஆனால், சிற்றூரில் பிறந்து, பெயர் பதிவு செய்யப்படாத குழந்தையின்
பெயரைப் பதிவு செய்ய ஒரு பெற்றோர், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள
வட்டாட்சியருக்கே விண்ணப்பிக்க வேண்டும். சில நேரங்களில் குழந்தை வேறு
மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்திருந்தாலும், பெற்றோர் தற்போது
வசிக்கும் பகுதியில் உள்ள வட்டாட்சியருக்கே விண்ணப்பிக்க வேண்டும். அப்படி
விண்ணப்பிக்கையில் அந்த வட்டாட்சியர், விண்ணப்பத்தில் கேட்டுள்ள கோரிக்கை
உண்மையெனத் தெரிந்தால், அக்குழந்தை பிறந்த சிற்றூர் எந்தப்பகுதியில்
வருகிறதோ, அந்தப் பகுதியின் வட்டாட்சியருக்குத் தனது செயல்முறையை ஒரு
கடிதம் வாயிலாகத் தெரிவிப்பதோடு, அக்கடிதத்தின் நகலை வின்னப்பதாரருக்கும்,
தேவைப்பட்டால், குறிப்பிட்ட சார்பதிவாலருக்கும் அனுப்பிவைப்பார்.
விண்ணப்பதாரர், தனக்கு அனுப்பப்பட்டுள்ள நகலுடன் பிறகு மீண்டும்
குறிப்பிட்ட அந்த வட்டாட்சியருக்கு விண்ணப்பித்து, அவர் வாயிலாக அந்தப்
பகுதியில் உள்ள சார் பதிவாளரின் அலுவலகத்தில் உள்ள பிறப்புப் பதிவேட்டில்
பெயரைப் பதிவு செய்து அதன் படி பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களை
தனக்கு வேண்டிய எண்ணிக்கையில் நகல்கலாகப் பெற்றுக்கொள்ளலாம்.
பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு என்பது ஒவ்வொருவரின் சொந்த ஊரில் அல்லது
நிலையான இருப்பிடத்தில் தான் பதிவு செய்யப்பட வேண்டும் என்று பலர்
நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இது தவறு. ஒரு குழந்தை எங்கு பிறக்கிறதோ
அங்கு தான் அதன் பிறப்புப் பதிவு செய்யப்பட வேண்டும். அதே போல், ஒருவர்
இறந்து விட்டாலும் அவர் எங்கு இறக்கிறாரோ அங்குதான் அவரது இறப்புப் பதிவு
செய்யப்பட வேண்டும். ஒருவர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும்
பொழுது இறந்து விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், அவர் இறந்து
விட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை என்ற நிலையில்,
மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற பிறகு அங்கு பரிசோதித்த மருத்துவர் நோயாளி
ஏற்கனவே சுமார் அரைமணி நேரத்திற்கு முன்னரே இறந்து விட்டார் என்று
சொன்னால்? சுமார் அரை மணி நேரத்திற்கு முன்னாள் தங்களது மருத்துவ அவசர கால
இயக்கூர்தி எந்த ஊரில் வந்து கொண்டிருந்திருக்கும் என்றெல்லாம் குழம்பத்
தேவையில்லை; மாறாக, எங்கு முதன் முதலில் ஒரு மருத்துவர் 'ஒருவர் இறந்து
விட்டார்' என்று கருதுகிறாரோ அங்கேயே அந்த இறப்பைப் பதிவு செய்யலாம்.
இறந்தவர் வீட்டிலிருந்து கிளம்பியவுடன் கூட இறந்திருக்க முடியும். அதற்காக
அங்கே சென்று தான் அவருடைய இறப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றெல்லாம்
இல்லை. அவருடைய இறப்பு எங்கு முதன் முதலில் ஒரு பதிவு பெற்ற மருத்துவரால்
உறுதி செய்யப்படுகிறதோ அங்குதான் அவர் இறந்ததாகக் கருதப்படுவார்.
பிறப்புச் சான்றிதழ் அல்லது இறப்புச் சான்றிதழில் பிறந்தவர் அல்லது
இறந்தவர் பெயர் உள்ளிட்ட தகவல்களைப் பதிவு செய்யும் பொழுது மிகவும் கவனமாக
இருக்க வேண்டும். பிறந்த குழந்தையின் தாய் தந்தையர் அல்லது முகவரியில்
ஏதேனும் தவறு இருந்தால், அதைச் சரியான சான்றுகள் அளித்து
மாற்றிக்கொள்ளலாம்; அதே வேளையில் குழந்தையின் பெயரில் ஏதேனும் மாற்றம்
தேவையென்றால் அப்படி மாற்ற முடியாது. எனவே, குழந்தையின் பெயரை உறுதி செய்த
பின்னரே அதைப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யவேண்டும். ஒருமுறை பதிவு
செய்துவிட்டால், அதை மாற்றுவது அவ்வளவு ஒன்றும் எளிதானது அல்ல. பெற்றோர்
சரியான தகவல்களை அளித்திருந்தும், பதிவு செய்யும் அலுவலர் ஏதேனும் தவறு
செய்திருந்தால் மட்டும், பதிவு செய்கையில் பெற்றோர் அளித்த விண்ணப்பத்தில்
உள்ள தகவல்களைப் பரிசோதித்துவிட்டு அதை மாற்றித் தருவர். எனவே, பிறப்புச்
சான்றிதழில் பெயர் பதிவு செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இந்தியப் பெற்றோர்களுக்கு வெளிநாட்டில் குழந்தைகள் பிறந்தால், அந்நாட்டில்
உள்ள தூதரகம் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும். அதாவது இந்தியாவில் உள்ள ஒரு
கணவனும் மனைவியும் பணி நிமித்தமாக, அல்லது குழந்தைப்பேறு மருத்துவத்
தேவைகளுக்காக வெளிநாட்டில் உள்ள ஒரு மருத்துவமனைய்ல் மருத்துவம் பார்த்து
அங்கேயே குழந்தை பெற்றுக்கொண்டால், அக்குழந்தையின் பிறப்பு அங்குள்ள தூதரக
அலுவலகம் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும். இறப்பும் அவ்வாரே பதிவு
செய்யப்படவேண்டும். ஒருவர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது
அவருக்கு உயர் மருத்துவக் காரணங்களுக்காக அவருடைய உறவினர்கள் வெளிநாட்டில்
உள்ள மருத்துவமனைகளை நாடுகின்றனர் என்று வைத்துக்கொள்வோம். அப்படி
வெளிநாட்டில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ நடவடிக்கைகளின் போது
அந்த நபர் இறந்து விட்டால், அங்குள்ள தூதரகம் வாயிலாகப் பதிவு செய்து
சான்றிதழ் பெற்றுக்கொள்ளவேண்டும்.
வான் ஊர்தியில் அல்லது கப்பலில் பயணிக்கும் பொழுது குழந்தை பிறந்தால்
அல்லது ஒருவர் இறந்துவிட்டால், அந்தப் பயணம் அதிகாரப்பூர்வமாக எங்கு
முடிகிறதோ அங்குதான் அந்தப் பிறப்பு அல்லது இறப்புப் பதிவு
செய்யப்படவேண்டும். எரிபொருள் நிரப்ப அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த
வான் ஊர்தி அல்லது கப்பல் ஏதாவது ஒரு நிலையில் நிறுத்தப்பட்டால் அதைப்
பற்றி எந்தக் கவலையும் இல்லை. உண்மையில் பயணியை அதிகாரப்பூர்வமாக எங்கு
இறக்கிவிடுகிறார்களோ அங்கு தான் பதிவு செய்யவேண்டும்.
வட்டாட்சியர், பொது மக்கள் அளிக்கும் மனுக்களின் மேல் முடிவெடுக்கும் முறை
- Steps of Thasilthar to make a decision on the applications given by people.
பொதுமக்கள், தங்களுக்குத் தேவைப்படும் பெரும்பாலான சான்றிதழ்களுக்கு
வட்டாட்சியரையே சார்ந்திருப்பதால் வட்டாட்சியர்களின் சான்று வழங்கும்
செயல்முறைகளைப் பற்றி ஓரளவு தெரிந்துவைத்திருத்தல் ஒரு பொதுத் தேவையாகும்.
எனவே அதைப்பற்றிச் சிறிது பார்ப்போம்.
பொதுவாக வாரிசுச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச்
சான்று, 'பட்டா' போன்ற சான்றுகள் அனைத்திற்கும் பொது மக்கள்
வட்டாட்சியருக்குத் தான் விண்ணப்பிக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழை
அல்லது இறப்புச் சான்றிதழைத் தவிர, வேறு எந்தச் சான்றிதழையும் வழங்க
சிற்றூர்(கிராம) நிருவாக அலுவலருக்கோ அல்லது நில வருவாய் அலுவலருக்கோ எந்த
அதிகாரமும் இல்லை. இவைகளை வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் தான்
வழங்குவர். இருப்பினும் விண்ணப்பம் வட்டாட்சியருக்குத் தான்
அளிக்கப்படவேண்டும். வட்டாட்சியர் தான் வழங்கவேண்டிய சான்றிதழ்களை மட்டும்
தானே வழங்குவார் (உம்.:ரூபாய் இரண்டு இலட்சத்திற்கும் மேலே
இருப்பவர்களுக்கான வருமானச் சான்று). இல்லையென்றால், துணை வட்டாட்சியர்கள்,
வட்டாட்சியர் இடத்திலிருந்து சான்று வழங்குவார்கள். எனினும் வழங்கப்படும்
அனைத்துச் சான்றிதழ்களுக்கும் வட்டாட்சியரே பொறுப்பு ஆவார்.
இப்படி வட்டாட்சியர் சான்று வழங்குவதற்குத் தேவையான விசாரணையை
நடத்தவேண்டியிருக்கிறது. ஆனால், வட்டாட்சியரே முன் நின்று அனைத்து
விசாரணைகளையும் நடத்துவதென்பது நடைமுறையில் வாய்ப்பற்ற ஒன்று. எனவே, அவர்
தன்னிடம் அளிக்கப்படும் மனுக்களை உரிய உத்தரவுடன்- அதாவது அம்மனு மீது உரிய
விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு நில வருவாய்
அலுவலருக்கு அனுப்புவார். நில வருவாய் அலுவலரும் நேரிடையாக அம்மனுக்கள்
அனைத்தின் மீதும் விசாரணை நடத்த முடியாது என்பதால், அவற்றை ஊர் வாரியாகப்
பிரித்து சம்பந்தப்பட்ட சிற்றூர்(கிராம) நிருவாக அலுவலருக்கு அனுப்புவார்.
அவர் அம்மனு மீது அனைத்து விதங்களிலும் விசாரணை செய்து அந்த அறிக்கையை
மீண்டும் நில வருவாய் அலுவலருக்கு அனுப்புவார். இங்கே, சிற்றூர்(கிராம)
நிருவாக அலுவலர் சம்பந்தப்பட்ட மனுதாரரை நேரில் அழைத்து விசாரிக்கலாம்,
அதனுடன் அவருடைய உதவியாளர்களிடம் விசாரிக்கலாம், அல்லது தான் ஒரு வகையில்
விசாரித்துக் கண்டு பிடித்த உண்மைகளை மேலும் உறுதிப்படுத்த
சம்பந்தப்பட்டவர் குடியிருக்கும் தெருவைச் சேர்ந்த அல்லது பகுதியைச்
சேர்ந்த பொது மக்களிடம் விசாரணை நடத்தலாம். அப்படி நடத்திய விசாரணையில்
கண்டுபிடித்த உண்மைகளை நில வருவாய் அலுவலருக்கு அறிக்கையாக அளிப்பார். அதன்
பின்பு நில வருவாய் அலுவலர் மேலும் மனுதாரரிடம் அல்லது வேறுவகையில்
சிற்றூர் நிருவாக அலுவலர் அளித்த அறிக்கையில் உள்ள தகவல்கள் உண்மையா
என்பதைக் கண்டறிய விசாரணை நடத்துவார். தேவைப்பட்டால், சிற்றூர் நிருவாக
அலுவலர் செய்த அனைத்து வேலைகளையும் நில வருவாய் அலுவலரும் செய்து
உண்மைகளைக் கண்டறிந்து அவற்றைத் தனியாக ஒரு அறிக்கையாகத் தயாரித்து,
சிற்றூர் நிருவாக அலுவலரின் அறிக்கையுடன் சேர்த்து வட்டாட்சியருக்கு
அனுப்புவார். இந்த இரண்டு அறிக்கைகளையும் சான்றாக வைத்துக் கொண்டு துணை
வட்டாட்சியர்கள் அல்லது வட்டாட்சியர் சான்றிதழை வழங்குவர். இதில் சிற்றூர்
நிருவாக அலுவலரும், நில வருவாய் அலுவலரும் அளிக்கும் அறிக்கைகளில்
முரண்பட்ட கருத்துக்கள் இருந்தால், வட்டாட்சியர் தனிப்பட்டு இருவரையும்
அழைத்து விசாரிப்பார். அதில் மன நிறைவு ஏற்படா விட்டால், அவரும் அனைத்து
விசாரணைகளையும் முதலில் இருந்து தொடங்கி மீண்டும் செய்வார். ரூபாய் இரண்டு
இலட்சத்திற்கு மேலே ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு வருமானச் சான்று
வழங்குகையில் சிற்றூர் நிருவாக அலுவலர் மற்றும் நில வருவாய் அலுவலர்
ஆகியோர் அளிக்கும் அறிக்கைகளையும் தாண்டி, வட்டாட்சியரும் தனிப்பட்டு
விசாரணை நடத்துவார். நத்தம் பட்டா மாறுதல் உள்ளிட்ட சில நிகழ்வுகளில் நில
வருவாய் அலுவலர் தலையிட மாட்டார்.
வாரிசுச் சான்றிதழ்
- Obtaining Legal Heir-ship Certificate.
ஒருவர் இறந்த பின் அவருடைய சொத்துக்களைப் பிரிப்பதில் வாரிசுச்
சான்றிதழின் பங்கு மிக மிக இன்றியமையாதது. வாரிசுச் சான்றிதழ் மதச்
சட்டங்களின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மதத்தைச்
சேர்ந்தவர்களுக்கும் ஒவ்வொரு முறையில் வாரிசுச் சான்று வழங்கப்படுகிறது.
இந்துக்களுக்கு இந்து திருமணச் சட்டத்தின் வழிகாட்டல்களின் அடிப்படையில்
வாரிசுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
ஒருவர் ஒரு அசையா அல்லது அசையும் சொத்தை வாங்க முற்படுகிறார் என்றால், அச்
சொத்தின் உரிமையாளர் மரணமடைந்து விட்டிருந்தால், அச் சொத்தின் தற்போதைய
உரிமையாளர் யார் என்ற கேள்வி எழும். இதில் யாரோ ஒருவர் நான்தான் இறந்தவரின்
வாரிசு என்று சொல்லி அச் சொத்தை விற்கும் நிலை உள்ளது அல்லவா? அப்படி அவரை
நம்பி அச்சொத்தை அவர் வாங்கிவிட்டால், பின் வேறொரு காலத்தில் மற்ற ஒருவர்
வந்து இறந்தவருக்கு நானும் ஒரு வாரிசு; இப்படியிருக்கையில் அந்தச் சொத்தை
வாங்கியது செல்லாது; அல்லது எனக்கும் அந்தச் சொத்திற்கு உரிய பயனை பணமாகவோ
அல்லது வேறுவிதமாகவோ அளிக்க வேண்டும் என்று கோரினால்..... இது புதிய
பிரச்சினைக்கு வழிவகுக்கும். இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கத்தான்
வாரிசுச் சான்றிதழ் என்ற நடைமுறை வழக்கிற்கு வந்தது. அதாவது ஒரு சொத்தின்
உரிமையாளர் ஒருவர் இறந்துவிட்டால், அச்சொத்தைச் சரியான வாரிசுகளின் பெயரில்
உரிமை மாற்றம் செய்து வைத்துக்கொள்ளவோ அல்லது விற்பனை செய்யவோ வாரிசுச்
சான்றிதழ் தான் இன்றியமையாத தேவையாகும். அசையாச் சொத்துக்களைப்
பொறுத்தளவில் அவை நிலம் அல்லது நிலத்தின் மேலுள்ள மரங்கள், வீடுகள், வணிகக்
கட்டிடங்கள் மற்ற அனைத்துவகையான உடைமைகள் அடங்கிய நிலம் என்ற நிலையில்
அவற்றிற்குப் 'பட்டா' எனப்படும் உரிமைச் சான்று வருவாய்த் துறையினரால்
வழங்கப்படுகிறது. இந்தப் 'பட்டா' வைத்திருக்கும் ஒருவர் இறந்துவிட்டால்,
அவருடைய வாரிசுச் சான்றிதழின் அடிப்படையிலேயே அவருடைய வாரிசுகளுக்குப்
'பட்டா' மாறுதல் செய்து தரப்படுகிறது. வாரிசு யாரெனத் தெரியாத நிலையில்
'பட்டா' மாறுதல் செய்வதும் இயலாத செயலே ஆகும்.அசையும் சொத்துக்களைப்
பொறுத்தளவில் பல உரிமைச் சான்றிதழ்கள் உள்ளன. அவற்றிற்கும் உரிய வாரிசுச்
சான்றிதழ் இருந்தால் தான் சரியான வாரிசுகளுக்கு உரிமைமாற்றம் செய்து தர
முடியும். எடுத்துக்காட்டாக, ஒருவர் இரண்டு மகிழ்வுந்துகள், ஒரு பேருந்து,
அதற்கான வழித்தட உரிமை, வங்கியில் பொன் அணிகலன்கள் போன்றவையை வைத்துள்ளார்
எனவும் அவர் இறந்து விட்டார் எனவும் வைத்துக்கொண்டால், அவர் வைத்திருக்கும்
ஊர்திகள் குறித்து போக்குவரத்துத் துறையில் வரும் வட்டாரப் போக்குவரத்து
அலுவலகங்களிலும், வங்கியிலும் உரிய வாரிசுச் சான்றிதழ்களை வழங்கியே அச்
சொத்துக்களின் உரிமையைத் தற்போதைய வாரிசுகளுக்கு மாற்ற முடியும்.
வாரிசுச் சான்றிதழ் என்பது சொத்துக்கள் குறித்த நடைமுறைகளுக்கே
பெரும்பாலும் தேவைப்படுவதால், இது மிகவும் இன்றியமையாத ஒரு சான்றிதழாகக்
கருதப்படுகிறது. இச்சான்றிதழில் உள்ள, வாரிசுகள் குறித்த அனைத்துத்
தகவல்களுக்கும் வட்டாட்சியரே முழுப் பொறுப்பாவார். வாரிசுதாரர்களில்
எவரேனும் ஒருவர் பெயர் விட்டுப்போயிருந்து அது பின்னாளில் ஒரு
பிரச்சினையானாலும் அதற்கும் வட்டாட்சியரே முழுப் பொறுப்பாவார். எனவே
வட்டாட்சியர்கள் இதில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர்.
தற்பொழுது நடைமுறையில் வாரிசுச் சான்றிதழ்களுக்கு அரசு அளித்துள்ள
படிவமும், பெரும்பாலும் அனைத்து வட்டாட்சியர்களும் அளிக்கும் வாரிசுச்
சான்றிதழ்களும் வாரிசுகள் குறித்த முழுத் தகவல்களையும் அளிக்கவல்லவை அல்ல.
இன்றைய நிலையில் உள்ள வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம்(
http://www.tn.gov.in/appforms/cert-legalheir.pdf)
முதல் நிலை வாரிசுகளின் பெயர்கள் மட்டும் இடம்பெறுமாறு
வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களுக்கு முழுப் பயனை அளிக்கவல்லதல்ல!
வாரிசுகளில் முதல்நிலை வாரிசுகள், இரண்டாம் நிலை வாரிசுகள் மற்றும்
மூன்றாம் நிலை வாரிசுகள் என அனைத்துத் தகவல்களும் இடம்பெறவேண்டும்.
இல்லையென்றால், வாரிசுச் சான்றிதழின் நோக்கம் நிறைவேறாது.
இந்த விண்ணப்பத்தில் கீழே ஒரு அட்டவணை தரப்பட்டுள்ளது. இந்த அட்டவணையின்
ஐந்தாவது கலத்தில் ஒரு வாரிசு திருமணமானவரா அல்லது ஆகாதவரா என்ற ஒரு
கேள்வி இடம் பெற்று உள்ளது. அது அத்துடன் முடிந்துவிடுகிறது. இங்கே தான்
பிரச்சினை ஆரம்பமாகிறது. இதைச் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
ஒருவர் இறந்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு, அவர் வாழும்
ஊரில் இல்லாமல் சுமார் நூறு 'கிலோ மீட்டர்' தொலைவில் பரம்பரைச் சொத்தாக
ஒரு ஐம்பது 'ஏக்கர்' விவசாய நன்செய் நிலம் உள்ளது என்றும்
வைத்துக்கொள்வோம். அவருக்கு ஒரு மனைவியும், இரண்டு மகன்களும்
இருக்கிறார்கள்; அந்த இரண்டு மகன்களில் ஒருவருக்குத் திருமணமாகி இரண்டு ஆண்
குழந்தைகள் உள்ளனர் எனவும் வைத்துக்கொள்வோம். இங்கு இறந்து போனவரின்
பரம்பரைச் சொத்தான ஐம்பது 'ஏக்கர்' நிலத்தை யாருக்கும் உரிமை மாற்றம்
செய்யாமல் இறந்துவிடுகிறார். அவர் இறந்த உடன் அந்தச் சொத்து சட்டப்படி
அந்தக் குடும்பச் சொத்தாக மாறிவிடுகிறது. அச்சொத்தில் அவருடைய மனைவி,
இரண்டு மகன்கள், திருமணமான ஒரு மகனின் மனைவி மற்றும் அவரின் இரு குழந்தைகள்
ஆகிய அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு உரிமை உள்ளது. தற்போது
வழங்கப்படும் வாரிசுச் சான்றிதழில் இறந்தவருடைய மனைவி மற்றும் இரண்டு
மகன்கள் மட்டுமே இடம் பெறுவர். ஒரு மகன் திருமணமானவர் என்று வேண்டுமென்றால்
குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், அவருடைய மனைவி அல்லது அவருடைய
குழந்தைகள் குறித்த எந்த விவரமும் இருக்காது. ஆக, இறந்தவருடைய சொத்துக்கான
'பட்டாவை' மாற்றும் பொழுது வாரிசுச் சான்றிதழின் அடிப்படையில் இறந்தவரின்
மனைவி, மற்றும் இரண்டு மகன்கள் பெயரிலேயே புதிய 'பட்டாவை' வழங்குவார்கள்.
அப்படி வழங்கப்படும் பட்டாவையும் அவர்கள் மூவர் பெயர்கள் மட்டுமே உள்ள
வாரிசுச் சான்றிதழையும் வைத்துக்கொண்டு அச்சொத்தை இந்த மூவருமே
இன்னொருவருக்கு விற்றுவிட முடியும். திருமணமான மகன் தனது மனைவிக்குத்
தெரியாமல் இதைச் செய்யமுடியும். இவர்களின் சொத்து வெளியூரில் இருப்பதால்,
அங்குள்ளவர்களுக்கு இவர்களின் வாரிசுகள் பற்றிய தகவலும் தெரியாது. அவர்கள்
என்ன செய்வார்கள்? பட்டாவையும் அவர்கள் மூவர் பெயர்கள் மட்டுமே உள்ள
வாரிசுச் சான்றிதழையும் மட்டுமே வைத்துக்கொண்டு இவர்கள் தான் அச்சொத்தின்
முழு உரிமையாளர்கள் என்று நினைத்து விடுவார்கள்; அங்குள்ள ஆவணப் பதிவாளரும்
'பட்டா' மற்றும் வாரிசுச் சான்றிதழின் அடிப்படையில் சொத்தின் உரிமையை
மாற்றி, எந்தவித ஆட்சேபனையும் இன்றிப் பதிவு செய்து கொடுத்துவிடுவார்.
இங்கே திருமணமான ஒரு மகனின் மனைவியும், குழந்தைகளும் ஏமாற்றப்பட நிறைய
வாய்ப்புக்கள் உள்ளன.
ஒரு சொத்தை வாங்கும் எவரும், சொத்தை வாங்கும் பொழுது வாரிசுச் சான்றின்
அடிப்படையிலேயே வாரிசுகளைக் கண்டறிய முடியும். ஆனால், இப்படி
வட்டாட்சியர்கள், வாரிசுச் சான்றிதழில் நேரடியான வாரிசுகளை மட்டுமே கொண்டு
வருகிறார்கள் என்ற நிலையில் மற்ற வாரிசுகளை எப்படிக் கண்டுபிடிக்க
முடியும்? ஒருவேளை அந்த நேரடியான வாரிசுகளில் ஒருவர் ஏறகனவே
இறந்துவிட்டிருந்தால், அவருக்குத் தனியாக இன்னொரு வாரிசுச் சான்றிதழ்
வாங்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இது தேவையற்றது. இந்தத் தேவையற்ற
அலைச்சலைக் குறைக்க, இறந்தவரின் மகன் மற்றும் மகள்கள் குறித்த விவரங்கள்,
அவர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் குறித்த விவரங்களையும் சேர்த்தே
வழங்கவேண்டும். அதேபோல, ஒருவர் இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல்
ஆகிவிட்டால், அவருக்கு வட்டாட்சியர் வாரிசுச் சான்றிதழ் வழங்குவதில்லை.
மாறாக, நீதிமன்றத்தின் மூலம் தீர்வு (பரிகாரம்) தேடிக்கொள்ள அறிவுறுத்தப்
படுகிறது. இதுவும் தவறு. ஒருவர் இறந்து பல ஆண்டுகாலம் ஆகிவிட்ட பின்பு,
அவருடைய வாரிசுகளைக் கண்டுபிடிப்பதில் பிரச்சினைகள், குழப்பங்கள்
இருந்தால், அல்லது வாரிசு உரிமையில் சிலர் பிரச்சினை செய்தால் மட்டுமே
வட்டாட்சியர் அந்த வாரிசுச் சான்றிதழுக்கான மனுதாரரிடம் நீதிமன்றத்தின்
வாயிலாகத் தீர்வு பெற அறிவுறுத்தலாம். மற்ற வழக்கமான நிலைகளில் ஒருவர்
இறந்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு மேல்
ஆகியிருந்தாலும் வட்டாட்சியரே வாரிசுச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்பதே
உண்மை. இதுவே சட்டத்தின் மற்றும் பொது மக்களின் தேவையாகும். மேலும், ஒருவர்
காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும், அவர் திரும்பி
வந்துவிடுவார் என்று நம்புவது அவருடைய குடும்பத்தினரின் ஒரு நிலையே தவிர
அது வட்டாட்சியரை எவ்விதத்திலும் பாதிக்காது. அந்தக் காணாமல் போன குடும்ப
உறுப்பினர் குறித்து காவல் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகள், செயல்முறைகள்
வாயிலாக 'அவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறார்' என்று சான்றுகளை
அளித்தால் மட்டுமே அவருடைய பெயரைத் தவிர்த்து மீதியுள்ளவர்களின் பெயர்களோடு
வாரிசுச் சான்றிதழ் வழங்கலாம். இல்லையெனில், அதாவது ஒருவர் காணாமல் போய்
ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகியும் அவர் காணாமல் போனது குறித்துக்
காவல்துறையில் சரியான புகார் அளித்தும், 'அவர் இறந்துவிட்டதாகக்
கருதப்படுகிறார்' எனச் சட்டப்பூர்வமான சான்றுகளின்றி ஒருவர் வந்தால்,
காணாமல் போனவரின் பெயரையும் சேர்த்தே வாரிசுச் சான்றிதழ் வழங்கமுடியும்.
இதையும் பல வட்டாட்சியர்கள் செய்வதில்லை.
ஒருவர் தனது பெயரில் வங்கியில் பலகோடி ரூபாய்களை வைப்புநிதியாக
வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தனது குடும்பத்துடன் வேறு
ஒரு இடத்திற்குத் தனது வாழ்விடத்தை மாற்றிக்கொள்கிறார் எனவும்
வைத்துக்கொள்வோம். பின்பு சில நாள்களில் அவர் மரணமடைந்து விட்டால், அவருடைய
மனைவி வாரிசுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம். அப்படி
விண்ணப்பிக்கும் பொழுது, 'அவர் தற்போதைய வசிப்பிடத்தில் மிகக் குறுகிய
காலத்திற்கு முன் தான் வந்தார்; ஆனால் பல்லாண்டுகள் வேறு ஒரு இடத்தில்
வசித்திருக்கிறார்; அங்கு இன்னொரு திருமணம் செய்திருக்கக்கூட வாய்ப்பு
இருக்கிறது; அப்படித் திருமணம் செய்திருந்தால் அங்கும் வாரிசுகள்
இருக்கலாம்' போன்ற சந்தேகங்கள் வட்டாட்சியருக்கு ஏற்படுமாயின், உடனடியாக
அவர், மனுதாரரின் கணவர் முன்பு வசித்த பகுதியின் வட்டாட்சியருக்கு ஒரு
அலுவல் சார் கடிதம் எழுதி விவரங்களைக் கேட்கலாம். அப்போது அந்த
வட்டாட்சியரும் அவர் முன்பு வசித்த பகுதி சிற்றூர்(கிராம) நிருவாக அலுவலர்
மற்றும் நில வருவாய் அலுவலரிடம் அறிக்கை பெற்று அதை இந்த வட்டாட்சியருக்கு
அனுப்பினால், அதையும் ஒரு சான்றாக வைத்துக்கொண்டு இந்த வட்டாட்சியர் சான்று
வழங்குவார்.
வாரிசுச் சான்று வாங்குவதற்கு உரிய படிவத்தில் (படிவம் பெற:
http://www.tn.gov.in/appforms/cert-legalheir.pdf) விண்ணப்பிக்க வேண்டும்.
எந்த ஒரு சட்டம் அல்லது அரசு ஆணை அல்லது அரசு விதியாகினும் அது
மக்களுக்குச் சிறந்த பணிகளை அளிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே
உருவாக்கப்படுகின்றது. எனவே, சட்டத்தை, விதியை, அல்லது அரசாணையைக் காரணம்
காட்டி ஒரு பணியினை முடிக்கவேண்டுமே ஒழிய, எந்தப் பணியையும் நிறுத்தி
வைக்கக் கூடாது. எந்த நிலையிலும் எந்த ஒரு சான்றிதழையும் ஒருவருக்குக்
கொடுக்கக்கூடாது என்று எந்த நிலையிலும் ஒரு வட்டாட்சியர் எளிமையாக முடிவு
எடுத்துவிடக்கூடாது! சட்டங்கள் அனைத்தும் மக்களுக்காகப்
பணியாற்றுவதற்கேயன்றி, பணிகளை மறுப்பதற்காக அல்ல என்பதை எந்த ஒரு அரசு
அலுவலரும் உணரவேண்டும்.
வருமானச் சான்றிதழ்
- Community, Income, and Residential Certificates.
சாதி,வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் பெரும்பாலும் பள்ளி
மாணவர்களுக்கு அதிக அளவில் தேவைப்படுவதால், இம்மூன்றையும் ஒரே
விண்ணப்பத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இருப்பினும் இவை மூன்றும்
எவ்விதத்திலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. நாம் இங்கு இம்மூன்றையும்
தனித்தனியாக எப்படிப் பெறுவது என்பதைத் தனித்தனித் தலைப்புக்களில்
பார்ப்போம். வருமானச் சான்றிதழ், பள்ளி கல்லூரியில் சேர்வதற்கும்,
கல்விக்கடன்கள் பெறுவதற்கும் மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும்
அதிக அளவில் பயன்படுகின்றன. மேலும், வங்கியில் கடன் பெற, மூவலூர்
இராமாமிர்தம் திருமண உதவித்திட்டம், இரண்டு பெண் குழந்தைகள் நலத்திட்டம்
உள்ளிட்ட அரசின் நல உதவிகள் பெறுவதற்கும், நடுவண் அரசுப்பணிகளில் நேரடியாக
அல்லது ஒன்றிய அரசுப்பணியாளர் தேரவானையத் தேர்வுகள் வாயிலாகப்
பணியமர்த்தப்படுவதற்கும் இன்றியமையாத ஒன்றாகிறது.
இந்த வருமானச் சான்றிதழ் பெறுவதற்கு அதற்கென உள்ள விண்ணப்பத்தில் சரியான
நீதிமன்ற வில்லைகள் ஒட்டி, அதனுடன் மனுதாரர் வாக்குமூலத்தையும் இணைத்து
வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்கவேண்டும். இந்த விண்ணப்பத்தை இங்கே பெறலாம்:
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf
ஆண்டு வருமானம் பன்னிரெண்டாயிரத்திற்குக் குறைவாக உள்ளவர்கள் ரூபாய்
இரண்டுக்கும், அதற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ரூபாய் பன்னிரெண்டுக்கும்
நீதிமன்ற வில்லை ஓட்ட வேண்டும். தமிழக அரசுப் பணியாளர்கள் இந்த முத்திரை
வில்லைகளை ஓட்ட வேண்டியது இல்லை.வட்டாட்சியர் இம்மனுவைத் தகுந்த
விசாரணைக்கு உட்படுத்தி, மனுதாரரின் தகவல்கள் சரியானவை என்று
உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு சான்று வழங்குவார். ஆண்டு வருமானம் ரூபாய்
இரண்டு இலட்சத்திற்குக் குறைவாக இருந்தால் மண்டலத் துணை வட்டாட்சியர்களும்,
அதற்கு மேல் ரூபாய் மூன்று இலட்சம் வரை வட்டாட்சியரும் சான்று வழங்குவர்.
இச் சான்றிதழுக்காக அரசு அளித்துள்ள விண்ணப்பப் படிவமும் முழுமையாக இல்லை.
அதில் இன்னும் கூடுதல் வினாக்கள் இடம்பெறவேண்டும். உதாரணமாக,
விண்ணப்பதாரரின் குடும்பத்தில் வேறு எவருக்கேனும் வருமானம் இருந்தால் அதைக்
குறிக்க எந்த வசதியும் இல்லை. குறைந்தது, 'கூடுதல் தகவல்களுக்கு கூடுதல்
தாள்கள் இணைக்கவும்' என்ற குறிப்பாவது இருக்க வேண்டும், அல்லது விளக்கமாக,
குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் வருமானம் பெறும் உறுப்பினர்களின்
பெயர்கள், அவர்களின் வயது, வருமானத்திற்கான காரணிகள் என்று சில கேள்விகள்
இடம் பெறலாம். இதனால், பல விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி
செய்வதிலிருந்து, சான்றிதழ் பெறத் தேவையான, மேலும் விவரங்களை அளிப்பது வரை
மிகுந்த சிரமப்படுகிறார்கள்.
வருமானம் என்பது மாறும் தன்மையுடன் இருப்பதால், வருமானச் சான்றிதழ் ஒரு
நிலையான சான்றிதழ் அல்ல. எப்பொழுது என்ன காரணத்திற்காக வருமானச் சான்றிதழ்
வாங்கப்படுகிறதோ, அப்பொழுது அந்தக் காரணத்திற்காக மட்டும் அதைப் பயன்படுத்த
வேண்டும். பிறகு மீண்டும் வேண்டுமென்றால், இன்னொரு முறை விண்ணப்பித்துப்
பெற்றுக்கொள்ளவேண்டும்.
என்னைப் பொறுத்தளவில், வருமானச் சான்றிதழ் வாங்கும் தேதி, வருமானம்
உள்ளிட்ட தகவல்களை, விண்ணப்பதாரரின் ஏதாவது ஒரு பதிவேட்டில் பதிவுசெய்ய
வேண்டும். உதாரணமாக, குடும்ப அட்டையில் பதிவுசெய்யலாம். ஏனென்றால்,
பொதுமக்களில் சிலர், அரசிடம் ஏதாவது உதவி தேவைப்பட்டால், குறைந்த அளவு
வருமானத்தையும், வங்கியில் கடன் வாங்குவது உள்ளிட்ட வேலைகளுக்கு அதிக
வருமானத்தையும் குறிப்பிட்டுச் சான்றிதழ் கேட்கின்றனர். இது அரசை
முற்றிலும் ஏமாற்றுவதோடு இல்லாமல், வங்கி உள்ளிட்ட நிறுவனங்களையும்
ஏமாற்றுவதாகும். வருமானச் சான்றிதழ் வழங்கும் போது, அதைத் தகுந்த வகையில்
பதிவு செய்யும்பொழுது, அதே நபர் மீண்டும் வருமானச் சான்றிதழ் கோரி
விண்ணப்பித்தால், முந்தைய விண்ணப்பத்திற்கும் தற்போதைய விண்ணப்பத்திற்கும்
இடையில் உள்ள வேறுபாடுகளை அறிந்து, அதற்கான காரணங்களைக் கேட்டறிந்து,
ஏமாற்றுவதைத் தவிர்க்கலாம்.
சாதிச் சான்றிதழ்
- Community Certificate
வருமானச் சான்றிதழ் போலவே சாதிச் சான்றிதழும் பெரும்பாலும்
மாணவர்களுக்கும், அரசுப் பணியில் சேர்பவர்களுக்கும் மட்டுமே நடைமுறையில்
தேவைப்படுகிறது. இச் சான்றிதழும் ஒரு தற்காலிகச் சான்றிதழே ஆகும். எவரும்
சாதியை மாற்றிக்கொள்ள முடியாது என்ற போதிலும், வகுப்பு என்பது மாற வாய்ப்பு
இருக்கிறது. அதாவது, ஒருவர் பிற்பட்ட வகுப்பில் இருக்கிறார் என்று
வைத்துக்கொள்வோம். அவர், தனது மதத்தை மாற்றிக்கொண்டால், வேருவகுப்பிற்குச்
சென்றுவிடுவார். அதாவது, ஆங்கிலத்தில் என்று அழைக்கப்படும் இச்சான்றிதழ்
தமிழில் வகுப்புச் சான்றிதழ் என்றுதான் அழைக்கப்படவேண்டும். ஆனால், சாதிச்
சான்றிதழ் என்றே அழைக்கப்படுகிறது. எனவே, சாதியை மாற்றமுடியாவிட்டாலும்,
வகுப்பு என்பது நிலையானது அல்ல. எனவே, சாதிச் சான்றிதழும் ஒரு நிலையான
சான்றிதழ் அல்ல. இருப்பினும் மாணவர்கள் தங்கள் கல்வித் தேவைகளுக்காக
ஒருமுறை இச்சான்றிதழைப் பெற்றால், அதைப் பல வருடங்களுக்குப்
பயன்படுத்திக்கொள்ளலாம். எனினும், மாணவர்களின் பெற்றோர் இடையில் தங்களது
மதத்தை மாற்றிக்கொண்டால், அதை முறைப்படி தெரிவித்து, தங்களது சாதிச்
சான்றிதழையும் மாற்றிக்கொள்ளவேண்டும். கல்விக் காரணங்களைத் தவிர்த்து மற்ற
காரணங்களுக்காக இச் சான்றிதழ் வேண்டுமென்றால், உதாரணமாக இரண்டு பெண்
குழந்தைகள் நலத் திட்டத்திற்கு இச்சான்றிதழ் வேண்டுமென்றால், அதற்கு
வழங்கப்படும் சான்றிதழ் ஒரு முறை மட்டும் குறிப்பிட்ட காரணத்திற்காக
மட்டும் பயன்படுத்தும்படியே வழங்கப்படும்.
வழக்கம் போல், இச் சான்றிதழும் வட்டாட்சியர் அலுவலகத்தில்
விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளும் ஒரு சான்றிதழே ஆகும். இச் சான்றிதழுக்கான
விண்ணப்பம் இந்த முகவரியில் கிடைக்கும்:
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf
(இந்த விண்ணப்பத்தில், எண் 5, 6, மற்றும் 7 ஆகியவை குடும்ப அட்டை,
மாற்றுச் சான்றிதழ், பெற்றோரின் இனச் சான்று உள்ளிட்டவைகளைக் கேட்கின்றன.
இருப்பினும் இவை எதுவும் இல்லாத பொழுது, இவற்றைப் பற்றிக் கவலைப்படத்
தேவையில்லை.)
இச் சான்றிதழ் தேவைப்படுவோர், தங்களது குடும்ப அட்டையின் நகலை இணைத்து
விண்ணப்பிக்க வேண்டும். வேறு ஆவணங்கள் ஏதாவது இருப்பின் கூடுதலாக
அளிக்கலாம்; ஆனால் கட்டாயமில்லை. பொதுவாக மனுவுடன் கூடுதல் ஆவணங்களை/
சான்றுகளை இணைப்பது எதற்கென்றால், வட்டாட்சியரின் பணிகளில் ஒரு எளிமையை
கொண்டுவந்து, சான்றிதழை விரைவாகப் பெறுவது ஒன்றுதான் காரணம். சாதிச்
சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் பொழுது, குடும்ப அட்டை கூட இருந்தால்
மட்டுமே அளிக்க வேண்டும். ஒருவருக்குக் குடும்ப அட்டையே இல்லை; எனவே
அவருக்குச் சாதிச் சான்றிதழே வாங்க முடியாது என்பதெல்லாம் தவறு. மனுதாரர்
தன்னிடம் வேறு சான்று/ஆவணங்கள் எவையும் இல்லையென்றால், மனுவை மட்டும் உரிய
முறையில் பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது. இப்படி மனு அளிக்கும்
பொழுது, சான்றிதழ் பெற இரண்டு அல்லது மூன்று நாள்கள் கூடுதலாக
எடுத்துக்கொள்ளப்படும். எனினும் சான்றிதழ் வழங்குவதற்குத் தேவையற்ற கால
தாமதத்தை வட்டாட்சியர் அலுவலகம் ஏற்படுத்த முடியாது. ஏனென்றால்,
வட்டாட்சியர் அலுவலகம் தான் அடிப்படைச் சான்றுகளை அளிக்கும் ஒரு
அலுவலகமாகும். அவர்களே பொது மக்களிடம் ஏதாவது சான்று கொடுத்தால் தான் பொது
மக்கள் கேட்க்கும் சான்றினை வழங்க முடியும் என்று கேட்பது முறையல்ல. எந்த
ஆவணமும் இணைக்கப்பட முடியாத பொழுது, பொது மக்கள் தங்களுக்குத் தேவையான
சான்று பெற, வட்டாட்சியருக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பது ஒரு
கூடுதல் தேவை.
அதாவது தங்களது கோரிக்கைக்கு வலுவூட்டும் காரணிகளை அளித்தல் உள்ளிட்ட
சில கூடுதல் பணிகளைச் செய்யலாம். இதுவும் கட்டாயமல்ல. ஒரு
வட்டாட்சியருக்கு, எவ்வகையிலும் விசாரித்து எந்த உண்மையையும் கொண்டுவரத்
தேவையான அனைத்து அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஆவணங்கள் இருந்தால்
அளிக்கலாம்; இல்லாவிட்டால் வட்டாட்சியரே சரியான சான்று வழங்குவார்.
இருப்பிடச் சான்றிதழ்
- Residential Certificate and Nativity Certificate
நம்மில் பலர் இருப்பிடச் சான்றிதழுக்கும் பிறப்பிடச் சான்றிதழுக்கும்
இடையில் உள்ள வேறுபாட்டை அறியாமல் குழம்பிக்கொள்கிறோம். இருப்பிடச்
சான்றிதழ் என்பது வழக்கமாக ஒருவர் எங்கு வசிக்கிறார் என்பதைக் காட்டும்
சான்றிதழ் ஆகும். ஆனால், பிறப்பிடச் சான்றிதழ் என்பது ஒருவர் எங்கு
பிறந்தார், அவர் பிறக்கும் பொழுது அவர் குடும்பம் எங்கு வசித்தது போன்ற
தகவல்களைத் தரும் சான்றிதழ் ஆகும். இவை இரண்டிற்குமே ஒருவர்
விண்ணப்பிக்கும் பொழுது எங்கு வசிக்கிராரோ அந்தப் பகுதி வட்டாட்சியருக்கே
விண்ணப்பிக்க வேண்டும். அந்த வட்டாட்சியர் தகுந்த விசாரணை வாயிலாக மனுவில்
கூறப்பட்டுள்ள தகவல்களை உறுதி செய்த பின்னர், மனுதாரருக்கு மேற்படிச்
சான்றிதழை வழங்குவார்.
இருப்பிடச் சான்றிதழுக்கான விண்ணப்பத்தினை இந்த முகவரியில் பெறலாம்:
http://www.tn.gov.in/appforms/cert-residential.pdf
பிறப்பிடச் சான்றிதழுக்கான விண்ணப்பத்தினை இந்த முகவரியில் பெறலாம்:
http://www.tn.gov.in/appforms/cert-nativity.pdf
பொதுவாக இருப்பிடச் சான்றிதழ் என்பது குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு
தேவையற்றது. ஆனால், பெரும்பாலான பள்ளி மாணவர்கள் தாங்கள் பள்ளியில்
சேர்வதற்குத் தேவையான சான்றிதழ் வாங்கும் பொழுது- அதாவது சாதி மற்றும்
வருமானச் சான்றிதழ் வாங்கும் பொழுது இருப்பிடச் சான்றிதழையும்
வாங்குகின்றனர். குடும்ப அட்டையே ஒரு இருப்பிடச் சான்றிதழே ஆகும். குடும்ப
அட்டை இல்லாதவர்கள் வேண்டுமென்றால், தனியாக இருப்பிடச் சான்றிதழ் கோரி
விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிக்கும் பொழுது மனுவின் கோரிக்கைக்கு சான்றாக வழக்கமாக
மற்ற சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் பொழுது அளிக்கும் சான்றுகளைப் போலவே
தங்கள் பகுதிப் பொது மக்கள் பத்துப் பேருடைய வாக்குமூலங்களை இணைக்கலாம்.
'பட்டா' மாறுதலுக்கான விண்ணப்பம் அளித்தல்
- Applying for Patta Name Transfer ie. Changing the Name of the Owner of an immovable property like farm lands.
பொதுவாக வீடுகள், கட்டிடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் குறித்த உரிமைகளை
மாற்றும் பொழுது, அந்த உரிமை மாற்றத்தை முறையாக ஆவணப்படுத்தி, அந்த
ஆவணத்தை பதிவுத் துறையில் பதிவு செய்ய வேண்டும். இப்படிப் பதிவு செய்த
பின்னர் அதுவே அச் சொத்தின் உரிமையைச் சொத்தை வாங்குபவருக்கு அளித்து
விடும். என்றாலும், அந்த உரிமையை அரசு அங்கீகரிக்க வேண்டும். அந்த
அங்கீகாரமே 'பட்டா' எனப்படும். அதாவது ஒருவர் தனது பெயரில் உள்ள
சொத்துக்களை மற்றொருவருக்கு விலைக்கு விற்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அவர், அச்சொத்தை வாங்குபவருடன் சேர்ந்து, அந்த விற்பனை நடவடிக்கையை
ஆவணப்படுத்த வேண்டும். இப்படி ஆவணப்படுத்துகையில், ஒரு சொத்தை விற்பவரே
இந்த விற்பனை நடவடிக்கையை ஆவணப்படுத்தலாம். அல்லது இதற்காக விற்பவரும்
வாங்குபவரும் சேர்ந்து, அரசிடம் முறையாக உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களை
நாடலாம். இப்படி அந்த விற்பனை நடவடிக்கையை ஆவணப்படுத்துவதற்கு, உறுதியான,
தூய்மையான வெள்ளைத் தாளில் விற்பவரின் பெயர், முழு முகவரி, சொத்தின்
உரிமைக்கான வழிகள் உள்ளிட்ட தகவல்களுடன், சொத்தை வாங்குபவரின் பெயர், முழு
முகவரி போன்ற விவரங்களுடன், அவற்றிற்கான சட்டப்பூர்வமான சான்றுகளுடன்
ஆவணத்தைத் தயார் செய்து, அந்த ஆவணத்தை, அச்சொத்து உள்ள பகுதியின் சார்
பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று முறையாகப் பதிவு செய்ய வேண்டும். அங்கு,
அப்பதிவிற்குப் பதிவுக் கட்டணமும், அச் சொத்தின் விற்பனை நடவடிக்கைக்கான
வரிகளும் ரூபாய் மதிப்பில் பணமாக/ கேட்பு வரைவோலையாக கட்டப்படவேண்டும்.
இதில் பதிவுக்கட்டணத்தைத் தவிர்த்து, மற்ற வரிகளைப் பணமாகவோ அல்லது கேட்பு
வரைவோலையாகவோ கட்டுவதற்குப் பதில் ஆவணப்படுத்துவதற்குப் பயன்படுத்தும்
உறுதியான தூய்மையான வெள்ளைத் தாள்களுக்குப் பதில் அந்த வரிக்கு இணையான
மதிப்புள்ள முத்திரைத் தாள்களைக் கூட வாங்கிக் கொள்ளலாம்.
இந்த ஆவணப்படுத்துதல் மற்றும் பதிவு செய்தலை இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்:
வழக்கமாகக் கடையில் சென்று ஒரு பொருளை வாங்குகிறோம். அப்பொருளுக்கு ஒரு
பெயர் இருக்கும்; அதைச் சொன்னால் போதும்- கடைக்காரர் அதை எடுத்துக்
கொடுத்துவிடுவார்- இது ஒரு விதமான வணிக நடவடிக்கை. இந்த நடவடிக்கையில்
வாங்குபவர் கேட்கும் ஒரு பொருளின் பெயரைச் சொன்னாலே அதைக் கடைக்காரர்
எடுத்துக் கொடுத்துவிடுவார். இங்கு ஒரு பெரிய அளவிலான ஒரு தொகை
செலவழித்துச் செய்யப்படும் வணிக நடவடிக்கை ஒன்றை எடுத்துக்கொண்டால், அதாவது
ஒரு இலகுரக இயக்கூர்தி- மகிழ்வுந்து ஒன்றைச் சுமார் நாற்பது இலட்ச
ரூபாய்க்கு ஒருவர் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த வணிக
நடவடிக்கையில் வாங்குபவர் பணத்தைக் கொடுக்கிறார்; விற்பவர் அதற்கான
'இரசீதுடன்' பொருளைக் கொடுக்கிறார். வாங்குவது என்பது இத்துடன்
முடிந்துவிட்டது. வாங்கும் பொருளுக்கு ஒரு பெயர் இருக்கும்; அந்தப் பெயர்
ஏற்கனவே வரையறுக்கப்பட்டிருக்கும்; அப்பொருளுக்கு ஒரு அடையாளமும்
இருக்கும். அந்தப் பெயரைச் சொன்னால் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
அப்பொருளுக்கு ஒரு நிலையான விலையும் இருக்கும். எனவே, விற்பனையாளர் தரும்
'இரசீது' அப்பொருளின் பெயர் மற்றும் அடையாளத்தைத் தாங்கி இருக்கும். அந்த
விற்பனையாளர் ஒரு வழக்கமான விற்பனையாளர் என்பதால் அவரின் விற்பனையகத்தில்
'இரசீதுப் புத்தகம்' மற்றும் சட்டப்படியான அனைத்து ஆவணங்களும் இருக்கும்.
அதே நேரம் ஒரு அசையாச் சொத்தை ஒருவர் வாங்கும் போது அச் சொத்திற்கு
அனைவருக்கும் தெரியுமளவிற்கு ஒரு வரையறுக்கப்பட்ட பெயர் இருக்காது. வீடு
என்றோ, விளை நிலம் என்றோ ஒரு பொதுவான பெயரைக் குறிக்க முடியுமா? அல்லது
சொத்தை விற்பவர்கள் வழக்கமான விற்பனையாளர்கள் இல்லை என்பதால் அவர்களிடம்
'இரசீதுப் புத்தகமும்' இருக்காது. எனவே, ஒரு பத்து 'ஏக்கர்' நன்செய்
நிலத்தை வாங்கிக் கொண்டு உங்களிடம் பத்து ஏக்கர் நன்செய் நிலத்தை நான்
வாங்கியாயிற்று; அதற்காக நான் செலுத்திய தொகைக்கு ஒரு 'இரசீது' போட்டுத்
தாருங்கள் என்று என்றும் கேட்க முடியாது. அது இவ்வளவு எளிதான வேலையன்று.
அதனால், இது போன்ற சொத்துக்களை விற்றல், மற்றும் வாங்குதலில் அனைத்து
விவரங்களையும் உள்ளடக்கிய ஒரு ஆவணத்தைப் புதிதாகத் தயாரிக்க வேண்டும்.
அதாவது மகிழ்வுந்து வாங்கும் பொழுது விற்பனையாளர் தரும் 'இரசீது'வைப் போல,
இங்கு ஒரு 'இரசீது' கொடுக்க வேண்டும். அந்த 'இரசீது' தான் ஆவணம் ஆகும்.
இந்த 'இரசீதில்', விற்பவர் மற்றும் வாங்குபவர் குறித்த தகவல்கள்- அதாவது
பெயர், முழு முகவரி போன்றன- விற்கப்படும் சொத்தைப் பற்றிய முழு விவரங்கள்-
அதாவது சொத்தின் பரப்பளவு, சொத்து இருக்கும் இடம், அச்சொத்தின் உரிமை
விற்பவருக்கு எப்படி வந்தது, சொத்தின் தற்காலத்திய விலை மதிப்பு, இவர்கள்
விற்கும் விலை உள்ளிட்ட விவரங்கள்- முழுமையாக இருக்க வேண்டும்.
இவ்விவரங்கள் அனைத்தும் அடங்கிய ஒரு ஆவணத்தைத் தயாரிக்க வேண்டும். இந்த
ஆவணத்தைத் தயாரிக்கத் தெரிந்த விற்பனையாளர் தனக்காகத் தானே ஒரு ஆவணத்தைத்
தயாரிக்கலாம். அல்லது அரசிடம் இசைவு பெற்ற ஆவன எழுத்தர் ஒருவரிடம் சென்று
ஆவணப்படுத்தலாம். அப்படி ஆவணப்படுத்திய பின், அதை அப்பொழுதே முறையாக
அப்பகுதிச் சார் பதிவாலரிடத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்குப்
பதிவுக்கட்டனமும், முத்திரைத் தாள் கட்டணமும் விதிக்கப்படும். அப்படி
விதிக்கப்படும் பதிவுக்கட்டனத்தைப் பணமாக அல்லது கேட்பு வரைவோலையாகச்
செலுத்தலாம். முத்திரைத் தாள் கட்டணத்தையும் பணமாக அல்லது கேட்பு
வரைவோலையாகச் செலுத்தலாம். இந்த முத்திரைத் தாள் கட்டணத்தை பணமாகவோ அல்லது
கேட்பு வரைவோலையாகச் செலுத்துவதற்குப் பதிலாக, அக்கட்டனத்தின் அளவு முக
மதிப்புள்ள முத்திரைத் தாள்களை வாங்கி, விற்பனை ஆவணத்தையே அம்முத்திரைத்
தாள்களிலேயே தயாரித்து விடுதல் நடைமுறையில் உள்ளது. அதாவது, முத்திரைத்
தாள் கட்டணத்தை முத்திரைத் தாள் வடிவிலும் அல்லது வேறு சில
ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவிலும் செலுத்தலாம்.
இந்த ஆவணத்தைப் எழுதிப் பதிவு செய்யும் பொழுது, பதிவாளர் அலுவலகத்தில்
'முத்திரைத் தாள்' வரி என்று சொத்தின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட
விகிதத்தைக் கட்ட வேண்டும். அந்த வரியை நேரிடையாகக் கட்டுவதற்குப் பதிலாகத்
தான், அந்த வரியின் மதிப்பின் அளவிற்குச் சமமான மதிப்புள்ள முத்திரைத்
தாள்களை வாங்கி அத் தாள்களில் ஆவணத்தைத் தயார் செய்யும் வழக்கம்
நடைமுறையில் உள்ளது.
விவசாய நிலங்கள், வீடுகள், காலி இடங்கள், கட்டிடங்கள் போன்ற அசையாச்
சொத்தினை வாங்கும் பொழுது, அவற்றின் உரிமையாளர் பெயரை முறைப்படி
வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு பட்டா
மாறுதல் என்று பெயர்.
ஒருவர் அல்லது பலர் சேர்ந்து ஒரு அல்லது பல அசையாச் சொத்துக்களை
விற்கும் பொழுது, விற்பவ(ர்களும்) ரும், வாங்குபவ(ர்களும்)ரும் சேர்ந்து
அதற்காக ஒரு ஆவணம் தயாரித்து அதை முறைப்படி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு
செய்யவேண்டும். அப்படிப் பதிவு செய்த ஆவணத்துடன் சென்று வட்டாட்சியர்
அலுவலகத்தில் விண்ணப்பித்து பட்டா மாறுதல் செய்ய வேண்டும். இதற்கெனத்
தனியாக விண்ணப்பப் படிவம் உள்ளது. அவ்விண்ணப்பத்தை முறையாகப் பூர்த்தி
செய்து அல்லது அதே போல கையில் எழுதி ஒரு விண்ணப்பம் தயார் செய்து
விண்ணப்பத்துடன் அச்சொத்தின் தற்போதைய உரிமை மாற்றத்திற்கு முந்தைய உரிமை
மாற்றத்தின் நாளுக்கு முன்தினம் முதல் இந்த விண்ணப்பம் அளிக்கும் நாள்
வரையிலான காலத்திற்கு சொத்து எந்தவித வில்லங்கத்திற்கும் உட்படுத்தப்
படவில்லை என 'வில்லங்கச் சான்றிதழ்' ஒன்றையும் சேர்த்து
விண்ணப்பிக்கவேண்டும்.
இரண்டு பெண் குழந்தைகள் நலத் திட்டம்
தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களிலேயே இது ஒரு
உன்னதமான திட்டம் எனலாம். ஏனென்றால், இது ஒரு பல்நோக்குத் திட்டமாகும்.
இத்திட்டத்தின் இலக்குகளாவன:
- ஏழைக்குடும்பங்களில் மற்றும் பித்தன்கிய குடும்பங்களில் பெண்
சிசுக்கொலை, பெண் குழந்தைகளைக் கொலை செய்தல், பெண் குழந்தைகளை விரும்பாமை
உள்ளிட்ட சமூக அவலங்களைக் குறைக்க முயற்சித்தல்.
- ஏழைக்குடும்பங்களில் குறைந்த பட்சமாக இடைநிலைக் கல்வியான பத்தாம்
வகுப்பு வரையாவது பெண் குழந்தைகள் கல்வி கற்றலை, மற்றும் தேர்ச்சி பெறுதலை
உறுதி செய்தல்.
- ஆண் வாரிசு வேண்டும் என்ற அறிவிற்கொவ்வாத மடமையை ஒழிக்க முயற்சி செய்தல்.
- இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உறுதி செய்தல்.
இத்திட்டத்தில் பயன் பெற, இரண்டு பெண் குழந்தைகளுடன்
குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஆண்டு வருமானம்
ரூ.24,000/- அல்லது அதற்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முதலில், இரண்டு பெண் குழந்தைகளின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்
பெறவேண்டும். பிறகு, அக்குழந்தைகளின் தாய் அல்லது தந்தை குடும்பக்
கட்டுப்பாட்டுக்குத் தேவையான சிகிச்சை மேற்கொண்டதற்கான ஆதாரத்தை முதலில்
மருத்துவமனையில் பெறவேண்டும். பின்பு, வட்டாட்சியரிடம் அந்த இரண்டு
சான்றிதழ்களையும் இணைத்து, இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் உள்ளனர்; ஆண்
வாரிசு எதுவும் இல்லை எனச் சான்றிதழ் பெறவேண்டும். இவற்றைப் பெற
விண்ணப்பிக்கும் பொழுதே வருமானச் சான்றிதழுக்கும் சேர்த்து விண்ணப்பிக்க
வேண்டும். இச் சான்றிதழ்களைப் பெற்ற பின்னர், இத்திட்டத்திற்கான விண்ணப்பப்
படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்து, அதனுடன் குழந்தைகளின் பெயருடன் கூடிய
பிறப்புச் சான்றிதல், ஆண் வாரிசு இல்லை எனச் சான்றிதழ், வருமானச்
சான்றிதழ் ஆகிய அனைத்துச் சான்றிதழ்களையும் இணைத்து இரு படிவங்களில்
விண்ணப்பிக்க வேண்டும். வருமானச் சான்றிதழை மட்டும் அசலை இணைத்துக் கொடுக்க
வேண்டும். மற்ற அனைத்துச் சான்றிதழ்களையும் சான்றொப்பம் பெற்று இரண்டு
விண்ணப்பப் படிவங்களுடன் இரு நகல்களில் அளிக்க வேண்டும்.
இரண்டாவது பெண் குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகளுக்கும் விண்ணப்பம்
அளிக்கப்படவேண்டும். ஒருவேளை, இரண்டாவது குழந்தை பிறக்கையில் இரட்டைக்
குழந்தை பிறந்தால், இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தைகளாக இருந்தாலும்
விண்ணப்பம் அளிக்கலாம். அதாவது இந்நிலையில் மூன்று பெண் குழந்தைகள்
இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
திருமண உதவித் திட்டங்கள்
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம்
ஏழைக்குடும்பங்களில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட
திட்டம் இது. இத்திட்டத்தில் மணப்பெண்ணின் பெற்றோருக்கு, அவர்கள்
மேற்கொள்ளும் திருமணச் செலவுகளை ஈடு செய்யவே உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மணப்பெண்ணின் தந்தை அல்லது தாய்க்கு இந்த உதவி வழங்கப்படுகிறது;
மணப்பெண்ணிற்கு எந்த உதவியும் வழங்கப்படாது. இத்திட்டத்தில், மணப்பெண்
பத்தாம் வகுப்பு படித்திருந்தால் ரூ. 25,000/- பணமாகவும், நான்கு கிராம்
தங்கமும் வழங்கப்படுகிறது; மணப்பெண் பட்டயப் படிப்பு அல்லது
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ. 50,000/- பணமாகவும், நான்கு
கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் உதவி பெற
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:
1. மணப்பெண்ணின் பெற்றோருக்கு ஆண்டு வருமானம் ரூ. 24,000/- அல்லது
அதற்குக் குறைவாக இருக்க வேண்டும். 2. திருமணத் தேதியன்று மணப்பெண்ணுக்கு
குறைந்தது பதினெட்டு வயது நிரம்பியிருக்க வேண்டும். 3. மணப்பெண் பத்தாம்
வகுப்பில் இறுதித் தேர்வுகள் அனைத்தும் எழுதியிருக்க வேண்டும். தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. (பத்தாம் வகுப்பு இறுதித்
தேர்வுகளில் ஏதேனும் ஒரு தேர்வுக்குச் செல்ல முடியாமல் இருந்தால் கூட
இத்திட்டத்தில் உதவி பெற விண்ணப்பிக்க முடியாது). அல்லது பட்டயப்படிப்பு/
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முதலில் வட்டாட்சியருக்கு விண்ணப்பித்து வருமானச் சான்றிதழ் பெற
வேண்டும். மாத வருமானம் ரூ. 2000/-ற்கு மேல் இருக்கக்கூடாது. (பார்க்கவும்:
வருமானச் சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள் தனியாக வழங்கப்பட்டுள்ளன.)
வருமானச் சான்றிதழ் பெற்ற பிறகு, மூவலூர் இராமாமிதம் திருமண உதவித்
திட்ட விண்ணப்பத்தைப் பெற்று அதைச் சரியாகப் பூர்த்தி செய்து, ஊராட்சி
மன்றத் தலைவர்/ உறுப்பினர், அரசிதழில் பதிவு பெற்ற அலுவலர், மற்றும்
உள்ளூரில் பணியாற்றும் அரசு அலுவலர் ஒருவரிடம் சாட்சியம் பெற்று, பத்தாம்
வகுப்பு மதிப்பெண் பட்டியலுடன் இரண்டு நகல்களில் விண்ணப்பத்தினை அளிக்க
வேண்டும். வருமானச் சான்றிதழ் அசலை ஒரு விண்ணப்பத்துடனும், அதன்
சான்றொப்பம் பெற்ற நகலை இன்னொரு வின்னப்பத்துடனும் இணைத்து, திருமணப்
அழைப்பிதழையும் ஒவ்வொரு விண்ணப்பத்துடனும் இணைத்து, திருமண நாளுக்கு
குறைந்தது ஒரு நாளைக்கு முன்னர் விண்ணப்பம் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி
அலுவலகத்தில் அளிக்கப்பட வேண்டும். திருமண நாளைக்கு முன்னர், அதிக அளவாக
தொண்ணூறு நாள்களை எடுத்துக்கொள்ளலாம். அதற்கு முன்னரே இவ் விண்ணப்பத்தை
அளித்தால், அது ஏற்றுக்கொள்ளப்படாது. அதாவது ஒரு சிலர், நான்கு
மாதங்களுக்கு முன்னர் கூடத் திருமணத்தை உறுதி செய்து விடுவர். ஆனால்,
அப்பொழுதே விண்ணப்பத்தை அளிக்கக் கூடாது. விண்ணப்பத் தேதிக்கும், திருமணத்
தேதிக்கும் அதிக அளவில் தொண்ணூறு நாட்களும், குறைந்த அளவில் ஒரு நாளும்
இருக்க வேண்டும். திருமணத்திற்கு முந்தைய நாள் விடுமுறை நாள் என்றால்,
அதற்கு முன்தினமே விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டும். திருமண நாளன்றோ, அல்லது
திருமணம் முடிந்து ஒரு நாள் கழித்தோ அல்லது திருமணத்திற்குப் பின்னரோ
இவ்விண்ணப்பம் அளிக்கப்பட்டால் அது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படாது
என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
- ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம்
இத் திட்டத்தில் பயன்பெற, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத்
திருமண உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறையிலேயே, அத்திட்டத்தில்
விண்ணப்பிக்கப் பெறும் சான்றிதழ்களுடன் மணப்பெண்ணின் தாயார் விதவை என்று
கூடுதலாக ஒரு சான்றிதழையும் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்
தகுதியைப் பொறுத்த வரை தனித் தேர்வராக இருந்தால் எட்டாம் வகுப்பு
தேர்ச்சியும், பள்ளியில் பயின்றிருந்தால் எட்டாம் வகுப்பு இறுதித்
தேர்வுகளை எழுதியவராகவும் இருத்தல் வேண்டும். மூவலூர் இராமாமிர்தம்
அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தின் வாயிலாக என்ன உதவிகள்
அளிக்கப்படுகின்றனவோ அதே அளவிலான உதவிகள்தான் இத்திட்டத்தின் வாயிலாகவும்
அளிக்கப்படுகின்றன.
- அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம்
ஆதரவற்ற முதியோர்/ விதவைகள்/ கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்/ ஊனமுற்றோர் உதவித் தொகைக்கான விண்ணப்பம்
குடும்ப அட்டை குறித்த விண்ணப்பங்கள்
பொதுவாக குடும்ப அட்டை என்பது பொது மக்கள் தங்களுடைய அவசியத் தேவைக்கான
பொருள்களில் சிலவற்றைச் சலுகை விலையில் பெற பயன்படுத்திக் கொள்ளும்
விதத்திலும் அல்லது அடையாளத்திற்கு மட்டுமே வைத்துக்கொள்ளும் விதத்திலுமே
வழங்கப்படுகிறது. பொருள்களைச் சலுகை விலையில் அல்லது விலையில்லாமல்
பெரும்பொழுது அரசிற்கு ஏற்படும் இழப்புக்களை முழுவதையும் அரசே
ஏற்றுக்கொள்வதால், குடும்ப அட்டை வழங்குவதில் முறைகேடுகள் ஏற்படக்கூடாது
என்பதில் அரசு முழுக்கவனம் எடுக்கிறது. எனவே, குடும்ப அட்டையில் உள்ள
உறுப்பினர்களின் பெயர்கள் இரு வேறு குடுன்ப அட்டைகளில் இருந்தால் அல்லது
ஒரே நபர்/ குடும்பம் இரு வேறு குடும்ப அட்டைகள் வைத்திருந்தால் அரசு
இவ்வகையில் வழங்கும் சலுகைகளை, அரசை ஏமாற்றிப் பெறுவதாகவே அரசு விதிகள்
பார்க்கின்றன. அதனால், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், குடும்ப
அட்டையில் உறுப்பினர்களைச் சேர்த்தல் மற்றும் நீக்குதல் என குடும்ப அட்டை
குறித்த அனைத்துப் பணிகளுக்கும் தகுந்த சான்றுகள் அளித்தால் மட்டுமே
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?
தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.
குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ?
தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில்
நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ்
எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும். மேலும்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு இணை தளத்திலும் தரைஇறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?
அந்தந்த தாலுக்கா அலுவலங்களில் உள்ள வட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி ( TSO ) அவர்களிடம் தாக்கல் செய்யவேண்டும்.
விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் எவை ?
விண்ணப்ப படிவத்தில் அதில் கோரப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து
கையொப்பம் இட வேண்டும். முழுமையற்ற படிவம் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
தேவையான ஆவணங்கள் :
1. இருப்பிடச் சான்று
2. தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை
3. வீட்டு வரி செலுத்திய / மின்சார கட்டணம் செலுத்திய / தொலைப்பேசி கட்டணம்
செலுத்திய போன்றவைகளின் ஏதாவது ஒரு ரசீதுகள் / வங்கி கணக்கு புத்தகத்தின்
முதல்பக்க நகல் / பாஸ்போர்ட் நகல் ( இதில் ஏதாவது ஓன்று மட்டும் போதுமானவை )
4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கு அதிகாரியிடம் ( TSO )
பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர்
நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.
5. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான “ குடும்ப அட்டை இல்லா “ சான்று.
6. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு
செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய்
நிறுவனத்தின் பெயர்.
7. விண்ணப்பதாரரின் தனது விண்ணப்பம் குறித்த தகவல்கள் பெற இலகுவாக தங்களின்
கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் பூர்த்தி
செய்யவும். அல்லது சுய முகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது
அஞ்சல் அட்டை இணைக்கலாம்.
மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா ?
1. தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின்
பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை
தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.
2. வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து
அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் மனுதாரரின் விண்ணப்பத்தின்
உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மனுதாரரின் வீட்டிற்க்கே வந்து ஆய்வு
செய்வார்கள்.
3. விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி,
அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி
ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.
புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?
அரசால் ரூ 5 /- கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும்.